×

கெங்கவல்லியில் நள்ளிரவு நேரத்தில் தீயில் கருகிய கார்

கெங்கவல்லி, அக்.15: கெங்கவல்லியில், நள்ளிரவு நேரத்தில் ஆசிரியருக்கு சொந்தமான கார் தீயில் கருகிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கெங்கவல்லி ஆத்தூர் மெயின்ரோட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கருமந்துறையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது காரை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம், நள்ளிரவு நேரத்தில் அந்த கார் மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி கெங்கவல்லி போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குபதிவு செய்து கார் எவ்வாறு தீப்பிடித்தது, யாரேனும் தீவைத்துவிட்டு தப்பி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை