×

பைக்கை விடுவிக்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற டிரைவர் ஆரணியில் பரபரப்பு

ஆரணி, செப்.10: ஆரணியில் பைக்கை விடுவிக்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கார் டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஷராப்பஜார் பகுதியில் உள்ள வராகமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(32), கார் டிரைவர். இவர் கடந்த 5ம் தேதி ஆரணி ஷராப்பஜார் தெருவில் சாலை ஓரமாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் மது குடித்தனர். அப்போது, போலீசார் ரோந்து வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த போலீசார் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் வேலை முடித்து விட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கு இரு சக்கர வாகனம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, புகாரை பெற்ற போலீசார் காவல் நிலையத்தில் உள்ள வாகனமா என கேட்டனர். அதற்கு அவர் என்னுடைய வாகனம் தான் என கூறியுள்ளார். பின்னர், போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை காண்பித்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்திற்கான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார். அதைபெற்று சரிபார்த்தபோது கோபாலகிருஷ்ணனின் வாகனம் தான் என்று தெரியவந்தது. பின்னர், வாகனத்தை கொடுக்க பணம் கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தார்களாம்.

அதற்கு கோபாலகிருஷ்ணன் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அப்போது, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இல்லை அதனால் நாளைக்கு வந்து வாகனத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தினமும் காலை, மாலை நேரங்களில் இரு சக்கர வாகனத்தை கேட்டு கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு வந்தாராம். ஆனால், போலீசார் வாகனத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் வந்து தனது இரு சக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அதற்கு போலீசார் இன்ஸ்பெக்டர் இல்லை அவர் வந்தவுடன் அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் தனது மனைவி விமலா, இரண்டு குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டு விட்டு ஆரணியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் சென்று கேனில் பெட்ரோல் வாங்கி காவல் நிலையம் வந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : police station ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...