×

தா.பழூர் பகுதியில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து வாகன ஓட்டிகள் அவதி

தா.பழூர், ஜூலை 18: தா.பழூர் பகுதியில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டார் மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை துவங்கிய நிலையில் தா.பழூர் சுற்றியுள்ள பகுதியில் சித்திரை கார் அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்தும் அதிகப்படியான வைக்கோல் வாகனங்கள் தா.பழூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. அவற்றில் அதிகப்படியான வாகனங்கள் இரவு நேரங்களில் பயணிக்கின்றன. இதனால் மாலை வேளையில் கடைவீதிகளில் கூடும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கும்பகோணத்தில் இருந்து தா.பழூர் வழியாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் இயங்குவதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தா.பழுர் கடைவீதியில் மாலை வேலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலைகள் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக செல்ல வேண்டியுள்ளது. வைக்கோல்களை அதிகளவில் வாகனங்களில் ஏற்றி செல்வதால் அந்த வாகனங்களை முந்தி செல்ல முடியாமல் அணிவகுத்து மெதுவாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று தஞ்சை கடைவீதி சாலையில் வைக்கோல் ஏற்றி சென்ற வாகனம் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இந்த அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். எனவே வைக்கோல் வாகனங்களை இரவு நேரங்களில் இயக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...