×

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஜெயங்கொண்டம், ஜூலை 16: ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்க கடந்த 1998ம் ஆண்டு கரடிகுளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர்த்தேக்கத் தொட்டி மூலம் நீர் ஏற்றி ஜெயங்கொண்டம் நகராட்சி 18வது வார்டு பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் அந்த ஆழ்குழாய் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என நாகராட்சியில் மனு அளித்திருந்தனர்.

இதேபோல் 18-வது வார்டில் வசிக்கும் இருளர் தெரு மக்களும் தாங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர். இந்நிலையில் 18 -வது வார்டு பொதுமக்களுக்கு என பொதுவாக ஏற்கனவே இருந்த ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க பூமி பூஜை நேற்று காலை நடைபெற இருந்தது. தகவலறிந்த இருளர்தெரு மக்கள் ஆழ்குழாய் கிணறு தாங்கள் இருளர் தெருவுக்கு வந்ததை தான் பொதுவாக அமைக்கிறார்கள் என நினைத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவம் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் எஸ்ஐ மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர் ஆகியோர் முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இது 18 - வார்டு பொதுமக்களுக்கு பொதுவாக அமைக்க வந்த ஆழ்குழாய் கிணறு என அதன் நகலை காண்பித்தனர். அப்போது ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட விவசாய சங்க பொருளாளர் உத்திராபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து இருளர் தெரு மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். . மேலும் இருளர் தெரு மக்கள் தங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் கூறி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...