தர்மபுரி, மே 25: பென்னாகரம் பகுதியில் தார்சாலை தரம் குறித்து காண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். மாநில நெடுஞ்சாலைத்துறையில், 2019-20ம் ஆண்டில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறைகளிடமிருந்து பெறப்பட்டு 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் புதுப்பிக்கும் பணி நடந்தது. இதன்படி, பென்னாகரத்தில் மஞ்சாரஅள்ளி, ராஜாவூர், புதுப்பட்டி மற்றும் மஞ்சநாயக்கனஅள்ளி உள்ளிட்ட 10 கிலோ மீட்டர் சாலைகள் ₹5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
நடந்து முடிந்த பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி ஆய்வு செய்தார். ஆய்வில் தார் சாலையின் கலவை விகிதம், கனஅளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது தர்மபுரி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் செல்வநம்பி, உதவி கோட்டப்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.