பழநி, மே 23: மாநில மலரான செங்காந்தளுக்கு (கண்வலி) அதிக கிராக்கி இருப்பதால் விலை நிர்ணயிப்பதில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே தொப்பம்பட்டி, வாகரை, பொருளூர், பூலாம்பட்டி, ஒட்டன்சத்திரம் அருகே தேவத்தூர், போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், பாறைவலசு, கப்பல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் முக்கிய பயிர்களில் ஒன்றாக கண்வலி கிழங்கு உள்ளது. இதன் உள்ளூர் பெயர் கண்வலி கிழங்காக இருந்தாலும், அதை செங்காந்தாள் செடி, கார்த்திகை செடி என்று அழைக்கும் பழக்கமும் வழக்கத்தில் இருந்து வருகிறது. நெருப்பு போன்று சிவந்த நிறத்தில் இதழ்களை கொண்டு கண்ணை கவரும் வகையில் செங்காந்தள் மலர்கள் இச்செடியில் பூக்கிறது. இதன் விதைகள் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதுடன், செங்காந்தள் மலர் நமது மாநில மலர் என்ற பெருமையையும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. கண்வலி செடி கோச்சிசாசியே எனும் தாவர இனத்தை சேர்ந்தவை.