பெரம்பலூர், மே 17: பெரம்பலூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள எறைய சமுத்திரத்திலிருந்து அய்யலூர் செல்லும் சாலை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்பாடி ஊராட்சியைச் சேர்ந்தது எறைய சமுத்திரம் கிராமம். இவ்வூரிலி ருந்து சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கிராமப்புறச் சாலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, தற்போது குண்டும், குழியுமான சாலையால் கனரக வாகனங்கள் முதல், இருசக்கர வாகன ஓட்டிகள் வரை தினமும் திண்டாடியபடி சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களில் சறுக்கி விடுவதும் சகஜமாகி விட்டது. தினமும் சிறுசிறு காயங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சாலை மிகப்பெரிய உயிர்ப்பலி விபத்தை ஏற்படுத்தும் முன்பாக, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து சீரமைத்துத் தரப்பட வேண்டுமென, கல்பாடி எறைய சமுத்திரம், அய்யலூர், சிறுவா ச்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.