வானூர், ஏப். 25: வானூர் வட்டார பகுதியில் கோடை வெப்பத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 65 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி பகுதிகளில் பெரும்பாலும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு மழையளவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. வானூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும்போது சிறிதுநேரத்திலேயே ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் காலியாகி விடுவதால் வெறும் மோட்டார் மட்டுமே செயல்படுகிறது.
இதனால் கிராமங்களில் குடிநீர் குறைந்த அளவே வருகிறது. சராசரியான அளவு தண்ணீர் கூட பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீர்மட்டம் உள்ள பகுதிகளில் இருந்து கூட்டுகுடிநீர் இணைப்பு மூலம் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் உரிய வழிவகைகளை செய்தால்தான் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். எனவே இத்திட்டத்தை அதிகாரிகள் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.