கொடைக்கானல், ஏப். 24: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து மாநில செயலாளர் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். கொடைக்கானலில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘மக்களவை தேர்தலை முடிந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தலை தமிழகம் எதிர்நோக்கி உள்ளது. இதற்கு பாஜக தயாராகி முன்னேற்பாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவுன்சிலர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. ஆனால் அவர்களும் எந்த பணிகளையும் செய்வதில்லை. இதனால் கிராமப்புறங்கள் சுகாதாரக்கேடால் சீரழிந்து வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் தற்போது உள்ள கூட்டணி தொடருமா என்பது பற்றி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேசிய அளவில் 2 பெரிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தை நமது மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கையாக எடுத்து கொள்ள வேண்டும். இன்னொரு பெரிய சம்பவம் ராகுல் மன்னிப்பு கேட்டது. அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கவில்லை. மோடி தொடர்ந்து பிரதமாக நீடிப்பார். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்’ என்றார். உடன் நிர்வாகிகள் அண்ணாதுரை, ரஞ்சித் உள்ளிட்டோர் இருந்தனர்.