புதுச்சேரி, மார்ச் 22: மேட்டுப்பாளையத்தில் மதுபானம் கடத்திய வாலிபர் ரோந்து போலீசாரிடம் சிக்கினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மதுகடத்தலை தடுக்க கலால்துறையிலும் சிறப்பு படை ஆங்காங்கே ரோந்து வருகிறது. இதுவரை பிற மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான கடத்தல் சரக்குகளை மாநில தேர்தல் துறை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே நேற்று மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் அங்குள்ள ஐடிஐ சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது கலால்துறை நிர்ணயித்துள்ள அளவைவிட கூடுதலாக அந்த நபர் மதுபானங்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தர்மாபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்ற அந்த நபரை கைது செய்த போலீசார், பிடிபட்ட சரக்குகளுடன் அவரை காலால் துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.4,500 ஆகும்.