போச்சம்பள்ளி, மார்ச் 21: உலக சிட்டு குருவிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து சோக்காடு செல்லும் கிராமத்தில் உள்ள பல வீடுகளில் சிட்டு குருவிகளை பாதுகாக்கும் வகையில் அட்டை பெட்டிகள் கொண்டு செய்யப்பட்ட கூடுகள் கட்டியுள்ளனர். வீடுகளின் முன்பு வைக்கப்பட்டுள்ள அந்த அட்டை பெட்டிகளில் சிட்டு குருவிகள் வந்து தங்கியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நகர் புறங்களில் சிட்டு குருவிகள் அழிந்து போன நிலையில், கிராமங்களில் அவற்றை காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இங்குள்ள வீடுகளின் முன் தாழ்வாரத்தில், சிட்டு குருவிகள் வந்து தங்கும் வகையில் அட்டை பெட்டிகளை வைத்துள்ளோம். மேலும், அதில், தண்ணீர், கம்பு, தினை உள்ளிட்ட தானியங்களை வைத்துள்ளோம். இதில் சிட்டு குருவிகள் வந்து தங்கி வாழ்ந்து வருகிறது. இதேபோல், ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுகளில் அட்டை பெட்டி கட்டி, சிட்டு குருவிகளை வளர்த்தால், அவற்றை அழியாமல் பாதுகாக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.