மதுரை, மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மதுரையில் பல்ேவறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மாணவர் அமைப்பு அறிவித்திருந்தது. இதனால், நேற்று அனைத்து கல்லூரிகள் மற்றும் மதுரையில் தமுக்கம், காந்தி மியூசியம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை கலெக்டர் அலுவலத்தை வழக்கறிஞர் ரஜினி தலைமையில், ஏராளாமான கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென்று முற்றுகையிட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர். அங்கு பணியிலிருந்த போலீசார், மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலக வாசல் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி முழக்கமிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை, மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்தனர்.