×

திருமணம் முடியும் வரை உயிர் பிரியக்கூடாது என வேண்டுதல் மகன் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் உயிரைவிட்ட தாய்

கண்ணமங்கலம், மார்ச் 14: மகனின் திருமணம் முடியும் வரை தனது உயிர் பிரியக்கூடாது என்று வேண்டி வந்த தாய், மகன் திருமணம் முடிந்ததும் சில மணி நேரத்தில் உயிர் நீத்த சம்பவம் கண்ணமங்கலம் அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி(60). கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக, இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இவரது இளைய மகன் சங்கர்(34) என்பவருக்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. எனவே, தனது மகனின் திருமணத்திற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர முயற்சி செய்த வந்தார். மகனின் திருமணம் முடியும் வரை தன்னுயிர் பிரியக்கூடாது என அன்றாடம் என கடவுளிடம் வேண்டிக்கொள்வாராம்.

இந்நிலையில், நேற்று காலை சங்கருக்கு, அவரது தாய் கிருஷ்ணவேணியின் ஆசியோடு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, திருமண மண்டபத்தில் இருந்து அனைவரும் மணமகன் வீடு திரும்பினர். தனது மகனுக்கு திருமணம் நடந்த மகிழ்ச்சியில் கிருஷ்ண வேணி இருந்தார். பின்னர், புதுமண தம்பதிகளை மணமகளின் வீட்டிற்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே வந்து பார்த்தபோது, கிருஷ்ணவேணியின் உயிர் படுக்கையில் பிரிந்திருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். தகவல் அறிந்ததும் அவரது மகன் சங்கர் விரைந்து வந்தார். தனது தாயின் வைராக்கியத்தையும், பாசத்தையும் நினைத்து பார்த்து அவர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்