மதுரை, பிப்.22: வைகை ஆறானது மதுரைக்குள் 11 கி.மீ. தூரம் வரை கடந்து செல்கிறது. வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் வைகை ஆற்றினுள் 67 இடங்களில் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் மாநகராட்சியே கழிவுநீரை கலக்கச் செய்கிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிரந்தரத் தீர்வு காணாமல் மாநகராட்சி இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக நேற்று பொறுப்பேற்ற விசாகன் கூறும்போது, ‘‘ஆன்லைன் மூலம் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்று மற்றும் கட்டிட வரைபட அனுமதி தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லை பெரியாறிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 28வார்டுகளிலும் பாதாளசாக்கடை திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். வைகை ஆற்றுக்குள் கலக்கும் கழிவுநீரை தடுத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் நல்ல தண்ணீராக மாற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பிற்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்’’ என்றார்.