அரியலூர் அருகே
அடையாளம் தெரியாத
கார் மோதி வாலிபர் பலி
அரியலூர், பிப்.14: அரியலூர் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்(29). அதே பகுதிகளை சேர்ந்த சுரேஷ்(30), முனியமுத்து(28). இவர்கள் 3 பேரும் கடந்த 6ம் தேதி இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வி.கைகாட்டி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் பைக்கில் 3 பேரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது பைக்கை ராஜசேகர் ஓட்டிவந்தபோது மற்ற இருவரும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் ரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பைக் வந்தபோது திருச்சியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் பைக்கின் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.அதன் பின்னர் முனியமுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.