திருப்பூர், ஜன. 22: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மரங்கள் எரிக்கப்பட்டத்தை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், காலேஜ் ரோடு பகுதியில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 1000 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு, நாட்டு நலப்பணி திட்ட அலகு 2 மாணவர்கள் சார்பில், கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுத்திக்கு பின்புறம் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு கலாம் பூங்கா என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட மூலிகை மரங்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள், இந்த பூங்காவிற்கு தீ வைத்துள்ளனர். இதனால், 50க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து கருகியது.
இதனையடுத்து, வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இத்தகைய செயலை செய்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால், நேற்று காலை தமிழ்நாடு ஆசிரியர் கழக திருப்பூர் மாவட்ட கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சமூக விரோதிகள் யார் என உடனடியாக கண்டறிய வேண்டும், கல்லூரியின் சுற்றுசு வரை உயர்த்தி கட்ட நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.