புதுச்சேரி, ஜன. 11: புதுவை சுதேசி மில் எதிரே பசுமாடு வளர்ப்போர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவையில் கால்நடை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கால்நடை வாரியம் அமைக்க வேண்டும், கால்நடைகளுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில கறவை பசுமாடு வளர்ப்போர் (ஏஐடியுசி) சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதேசி மில் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோசலிஸ்ட் கட்சி லெனின்துரை, ஏஐடியுசி முத்து, சிவக்குமார், பால் உற்பத்தியாளர்
சங்கம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.இதில் கறவை மாடுகளுடன் கால்நடை உரிமையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.