நாகை. டிச.12:பெண் விஏஓவினருக்கு மாறுதல் வழங்க வலியுறுத்தி விஏஓவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவர்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாறுதல் வழங்க வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கம்ப்யூட்டர் இணைய தள வசதி செய்து தர வேண்டும்.
காலி பணியிடம் உள்ளதால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்த நாகை வட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திருமருகல் கடைத் தெருவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நேற்றுடன் இரண்டாவது நாளாக நீடிப்பதால் நாகை மாவட்டத்தில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.