திருப்பூர், டிச.11: அவிநாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், அவிநாசி ரோடு குமார் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட பொருளாளர் வேலுமணி, துணைச்செயலாளர் தம்பிவெங்கடாசலம், மண்டல செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகம் வரவேற்றார்.கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். திருப்பூர் பின்னலாடை தொழில் மேம்பட மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்கவேண்டும். திருப்பூர் தொழில் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அவிநாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும். கோவையிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநகர செயலாளர்கள் தேவராஜ், செல்வகுமார், விஜயசாரதி, கனகராஜ் உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.