புதுச்சேரி, அக். 17: புதுவையில் மூளைக் காய்ச்சலால் மனமுடைந்த பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர் ஜிப்மரில் தங்கியிருந்த வார்ட்டில் உள்ள பாத்ரூமில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை, வைத்திக்குப்பம், செல்வராஜ் செட்டியார் வீதியில் வசித்தவர் ராஜா (54). பொதுப்பணித்துறையில் எம்டிஎஸ் (பல்நோக்கு) ஊழியராக பணியாற்றி வந்தார். சில தினங்களாக மூளைக் காய்ச்சல் நோயால் ராஜா அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஜிப்மர் டாக்டர் அறிவுறுத்தலின்பேரில் அங்கு கடந்த வாரம் உட்புற நோயாளியாக ேசர்க்கப்பட்ட ராஜாவுக்கு மருத்துவக்குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இதனிடையே ராஜா பதற்றமான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிப்மர், ஸ்பெஷல் வார்ட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ராஜா அங்குள்ள பாத்ரூமில் துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாகியும் பாத்ரூம் சென்ற ராஜா வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராஜாவின் மனைவி நளினா கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிந்த சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாவின் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் பொதுப்பணித்துறை ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.