ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் இருந்து அனந்தசாகரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பவானி அடுத்துள்ள பி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் விவசாய சங்க நிர்வாகி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தடப்பள்ளி ராஜவாய்க்கால் கடைக்கோடி பகுதியான அனந்தசாகரம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தடப்பள்ளி ராஜவாய்க்கால் கடைக்கோடி பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் தூர்வார வேண்டும், மதகுகள் பழுதடைந்துள்ள பகுதிகளில் புதியதாக மாற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். அவசர தேவை கருதி தற்போது கீழ்பவானி மெயின் வாய்க்காலில் நல்லாம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஷட்டரை திறந்து அனந்தசாகரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.