×

டிஜிபி தலைமையில் சுதந்திர தினவிழா இறுதி ஒத்திகை

புதுச்சேரி, ஆக. 14:   சுதந்திர தினம் நாளை (15ம்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புதுவையில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி புதுச்சேரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்கள் மூலம் பரிசோதித்தனர். மப்டி உடைகளில் போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிமாநில வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஓட்டல், லாட்ஜ், விடுதிகளை ஆய்வு செய்து புதிய நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க உரிமையாளர்களை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் நேற்று சுதந்திர தின இறுதி ஒத்திகை டிஜிபி சுந்தரி நந்தா தலைமையில் நடைபெற்றது. இதில் டிஐஜி சந்திரன், சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...