புதுச்சேரி, ஆக. 14: புதுவையில் பானிபூரி கடையை சூறையாடிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது இக்பால் (25). புதுச்சேரி ராஜா நகரில் பாணிபூரி தயாரித்து வியாபாரம் ெசய்து வருகிறார். இவரிடம் பணிபுரியும் சரீப்கான் (25) நேற்று முன்தினம் லெனின் வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த 5 பேர் கும்பல் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் சரீப்கான் காசு கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த 5 பேரும் சரீப்கானை சரமாரியாக தாக்கியதோடு அவர் வைத்திருந்த பாணி பூரி கடையை அடித்து நொறுக்கினர். இதில் பாணி பூரி உள்ளிட்ட பொருட்கள் உடைந்து நொறுங்கின. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த சரீப்கான் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போலீசார் கொசப்பாளையம், கருணாகர பிள்ளை வீதியைச் சேர்ந்த சிவா (21) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த விக்கி உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.