புதுச்சேரி, ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுவையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தில் நேற்று அரசு பொதுவிடுமுறை அறிக்கப்பட்டது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் புதுவையிலும் நேற்று பொது விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக புதுவையில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நேற்று இயங்கவில்லை. இதேபோல் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களிலும் பொது விடுமுறை விடப்பட்டது.
இதுதவிர கருணாநிதி மறைவுக்காக புதுச்சேரியில் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்த நிலையில், நேற்று அமைச்சரவை கூடி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி புதுவையில் ஒருவாரத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் துக்க அறிவிப்புக்கிணங்க சட்டசபை, தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.