×

விடிய, விடிய நடந்த பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரியில் சர்வர் பிரச்னையால் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு விடிய, விடிய நடந்தது.
 கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு 300க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், கலந்தாய்வு நடக்கும் கிருஷ்ணகிரி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கிற்கு வந்தனர். ஆனால் இணையதள  சர்வர் பிரச்னையால் கலந்தாய்வு தொடங்கவில்லை. இதனால் கலந்தாய்விற்கு வந்த  ஆசிரிய, ஆசிரியைகள் செய்வதறியாமல் திகைத்தனர். இந்த பிரச்னையானது இரவு 10 மணி  வரை நீடித்தது.

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அங்கு வந்திருந்த ஆசிரிய, ஆசிரியைகளை காத்திருக்க சொன்னார். சர்வர் பிரச்னை சீரானதும் இரவு 11 மணிக்கு மேல் ஒவ்வொரு ஆசிரியர் களும் கலந்தாய்வு மூலம் நிரவல் செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. 200க்கும்  மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அதற்கான ஆணையை முதன்மை கல்வி அலுவலர்  வழங்கினார். நேற்று அதிகாலை 4 மணி வரையில் இந்த கலந்தாய்வு நடந்ததால், இதில்  பங்கேற்ற ஆசிரிய, ஆசிரியைகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் கலந்தாய்வு நடந்த பள்ளியில் எந்தவித  அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் இருந்ததால் அவதிக்குள்ளாகினர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு