×

கிருமாம்பாக்கத்தில் காலாவதி மருந்து பொருட்களை சாலையோரம் வீசியவர் கைது

பாகூர், ஜூன் 18: புதுவை கிருமாம்பாக்கத்தில் காலாவதி மருந்து, ஊசி மூட்டையை சாலையோரம் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை கிருமாம்பாக்கம் கடலூர் மெயின் ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் மதியம் ஒரு நபர் காரில் வந்தார். அவர், காரில் இருந்து சில மூட்டைகளை எடுத்து சாலையோரம் வீசினார். சந்தேகம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் காலாவதியான மருந்து, மாத்திரை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து, கிருமாம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்தரி தலைமையிலான போலீசார் அவரை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (52) என்பதும், அங்குள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. புதுச்சேரிக்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க வந்தபோது மருந்து கடையில் இருந்த காலாவதி மருந்து, மாத்திரை மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சாலையோரத்தில் கொட்டியதாகவும் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மருந்து பொருட்களை திறந்தவெளியில் சாலையோரம் வீசியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...