வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை கடந்த 24ம் தேதி இரவு கடுமையான சூறாவளி சூறையாடியது. மணிக்கு சுமார் 320 கிமீ வரை வீசிய சூறாவளியால் கர்ரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலரும் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்.இந்த சூறாவளியால் பல வீடுகள், வணிக வளாகங்கள் தரைமட்டமாகின. மிசிசிபி மாகாணத்தில் சூறாவளிக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பல நகரங்களும் குப்பை குவியலாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மிசிசிபி மாகாணத்தில் அவசரநிலையை அதிபர் ஜோ பைடன் நேற்று பிரகடனப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.