×

டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்

புதுடெல்லி: எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கத்துடன் பேசினார். டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சார்பில் இன்று நடந்த சங்கல்ப் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘கடந்த 1991ம் ஆண்டில் நடந்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். என் தந்தையின் (ராஜீவ் காந்தி) இறுதி ஊர்வலம் தீன் மூர்த்தி பவனில் இருந்து புறப்பட்டு சென்றது. எங்களது தாய் (சோனியா), எனது சகோதரர் (ராகுல்) மற்றும் குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தோம்.

எங்களது வாகனத்திற்கு முன்னால் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் சென்றது. அந்த வாகனத்தில் என் தந்தையின் உடல் இருந்தது. ராணுவ வாகனம் முன்னோக்கி சென்ற போது, எங்களது காரில் இருந்து கீழே இறங்கி நடந்து செல்ல வேண்டும் என்று ராகுல் கூறினார். அதற்காக அவர் காரில் இருந்து இறங்க முற்பட்டார். ஆனால் எனது தாய், பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுலை காரில் இருந்து இறங்க அனுமதி மறுத்துவிட்டார். இருந்தும் காரில் இருந்து இறங்கிய ராகுல், ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். சுட்டெரிக்கும் வெயிலில் தந்தையின் இறுதிச் சடங்கிற்காக பின் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 500 கஜம் தூரத்திற்கு நடந்தே சென்று எனது தந்தைக்கு இறுதிச் சடங்கை செய்தார். அன்று நடந்த நிகழ்வுகள் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.

ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மறைந்த எனது தந்தை அவமதிக்கப்படுகிறார். ஒரு தியாகியின் மகனை துரோகி என்று சொல்லி அவமதிக்கிறீர்கள். எனது தாயை அவமதிக்கின்றனர். ராகுல் காந்திக்கு தனது தந்தை யார் என்று தெரியாது என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எனது சகோதரர் மோடியை கட்டிப்பிடித்து அன்பை வௌிப்படுத்தினார். அவர் உங்களை வெறுக்கவில்லை. எங்களிடம் வெறுப்பு சித்தாந்தம் இல்லை’ என்று உருக்கமாக பேசினார். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை, பிரியங்கா காந்தி பொதுவெளியில் உணர்ச்சி பூர்வமாக கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதில்லை, சிறைக்கு அனுப்பப்படுவதில்லை, வருடக்கணக்கில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்துவதும் இல்லை. அவர்கள் எனது குடும்பத்தை பலமுறை அவமதித்துள்ளனர், ஆனால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.ஹார்வர்ட் & கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்த ராகுல் காந்தி, அவரை பப்பு என்று அழைக்கத் தொடங்கினர், ஆனால் அவர் ஒரு பப்பு அல்ல, அவர் நேர்மையானவர் மற்றும் சாமானியர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்பவர் என்று பின்னர் தெரிந்துகொண்டார்.



Tags : Rajkat, Delhi ,Priyanka Gandhi , Satyagraha protest in Delhi Rajgat You keep humiliating our family!.. Priyanka Gandhi meltdown saying what happened 32 years ago
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!