வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம், வங்கிகள், நூலகம், மேல்நிலைப் பள்ளிகள், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், சர்பதிவாளர் அலுவலகம், கருவுலக அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வாலாஜாபாத் பேரூராட்சியின் மூலம் தொழில்வரி, வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமம் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம் நாள்தோறும் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் வரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களின் நிலுவையில் உள்ள குடிநீர்வரி, வீட்டுவரி, தொழில் உரிமம் கட்டணம் உள்ளிட்ட வரிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகத்திலேயே அல்லது பேரூராட்சி அலுவலர்கள் மூலம் மற்றும் வரி வசூலிக்க வருபவர் மூலமாகவோ செலுத்த வேண்டும். அப்படி, செலுத்தாவிட்டால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்புகளும், பேரூராட்சி ஊழியர்கள் மூலம் துண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
