×

மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை..! பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி

திருமலை: மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் ஆந்திராவில் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பு ஆப் ஆன திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள், வாங்கும் மொபைல் போன்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் மார்ச் 8ஆம் தேதி பெண் காவலர்களுக்கு விடுமுறை வழங்குவதுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் செய்ய உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட வணிக வளாகங்களில் இயங்கும் செல்போன் கடைகளில் மொபைல் போன் வாங்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திஷா பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய செயலியாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி ,அதில் பாதுகாப்பான இடங்கள், காவல் நிலையங்கள் ,மருத்துவமனைகள் என பயனுள்ள தொடர்புகள் குறித்த விவரங்களும் அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன் திஷா செயலியின் முக்கியத்துவத்தை பரவலாக அனைவரும் அறிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் அறிவித்துள்ளார். அத்துடன் மகளிர் தினத்தன்று ஆந்திர மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்படும் என்று கூறியுள்ள அவர் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Women's Day ,Andhra Pradesh Government Action , Holiday for female guards on Women's Day ..! 10% discount if women buy mobile phones: Andhra Pradesh Government Action
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்