×

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு: 1 கோடி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி; 29ம் தேதி முதல் 234 தொகுதிகளில் பிரசாரம்

சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100  நாட்கள் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு  காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். அதில் ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் அவர் வருகிற 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் எல்லா வகையிலும் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது. பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது. வேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியது. இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்த அரசு தான் அதிமுக அரசு. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தொகுதிகளில் கூட எதுவும் நடக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை முழுமையாக இந்த அரசு கைவிட்டு விட்டது.

மக்களுக்குத் தேவைப்படும்போது கொடுக்காமல், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தேர்தலை மனதில் வைத்துக் கொடுத்தார்கள். தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக கைவிடவில்லை. ‘‘ஒன்றிணைவோம் வா” - திட்டத்தை அடுத்து ‘‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற பிரசாரத்தை திமுக மூத்த நிர்வாகிகள் 20 பேர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மக்கள் கிராம சபை கூட்டத்தில் 21 ஆயிரம் கிராம/வார்டுகளில் மக்களைச் சந்தித்து சுமார் ஒன்றே கால் கோடி மக்கள், அதிமுகவை நிராகரிக்கிறோம்- என்று சூளுரை எடுத்துள்ளார்கள். அதிமுக மீதான கோபத்தையும், திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும் நாம் பார்த்தோம். இதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையையும், தொலைநோக்கு திட்டங்களையும் சொல்வது திமுகவின் வழக்கம். இந்த முறை அதனை விட முக்கியமான ஒன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படுகிறது. அதனை நான் அறிவிக்கிறேன்.

“மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான - மக்களை நோக்கிய எனது பயணத்தை வருகிற 29ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பது இந்தப் பயணத்துக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்.  அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன்.

நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த, கிராமம் அல்லது வார்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்னிடம் தங்களது கோரிக்கை மனுக்களை தரலாம். அந்தந்த இடங்களில் ஒவ்வொருவரின் குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட படிவத்தில் எழுதப்பட்டு, அவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டும் கையில் வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து, மக்கள் முன்னிலையிலேயே பாதுகாப்பாக அதற்குச் சீல் வைப்பேன்.  இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; இதற்கென உருவாக்கப்பட்ட  இணையதளம் (www.stalinani.com) வாயிலாகவோ;  91710 91710 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ தங்கள் பிரச்னைகளைப் பதிவு செய்யலாம்.

திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் சொல்வார்: சொன்னதைச் செய்வோம்- செய்வதைத் தான் சொல்வோம் என்று அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன். தமிழகம் முழுவதும் மக்களிடம் வாங்கிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழக அரசில் தனித்துறை ஒன்று உருவாக்கப்படும். அந்த துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களைப் பிரித்துப் பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன்.

தொகுதிவாரியாக - ஏன் கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்னைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதாவது பத்து ஆண்டுகளாக அதிமுக அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை-திமுக அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும். இந்தக் கடமையை திமுக அரசு நிறைவேற்றி முடிக்கும் போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று அண்ணாவின் மீது ஆணையாக-தலைவர் கலைஞர் மீது ஆணையாக-தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக-நான் உறுதியேற்கிறேன். உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:
இந்த கோரிக்கை மனுக்களில் இடம்பெறும் மனுக்கள் தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெறுமா? தேர்தல் அறிக்கை வேறு, இது வேறு. தேர்தல் அறிக்கை, டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக சென்று கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பொது பிரச்னைகள் அதில் இடம்பெறும். ஒருவரின் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளா? தனிப்பட்ட பிரச்சினைகளா? அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தான். உதாரணமாக கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்னை, பட்டா பிரச்னை, ஓய்வூதியப் பிரச்னை, முதியோர் உதவித்தொகை பிரச்சனை, 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை இதுபோன்ற பிரச்னைகள் தான் பேசப்பட்டன. அதே போல தான் இதுவும்.

ஏற்கனவே முதல்வர் மூலமாக ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இதுபோல ஒரு திட்டம் செயல்பட்டுகொண்டிருக்கிறதே? அந்த திட்டம் பெயரளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. முழு அளவில் நடைபெறவில்லை. அது முழு அளவில் நடைபெற்றிருந்தால் நாங்கள் இந்த திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்தத் திட்டத்தையும் நாங்கள் முறைப்படுத்துவோம். இந்த தனிப்பட்ட பிரச்னைகள் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வாறு மக்களை சந்திக்கப் போகிறீர்கள்?

முதலில் நான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்கிறேன். அந்த மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு குறிப்பிட்ட தேதியில் தலைவர் வருகிறார். உங்களது குறைகளை நீங்கள் சொல்லலாம் என்று விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் நேரடியாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் அவர்கள் குறைகளை பதிவு செய்வார்கள். அதற்கு பிறகு நான் அந்த குறைகளை வாங்கி ஒரு பெட்டியில் சீல் வைத்து, நான் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக நானே அதை பிரித்து அந்த பிரச்னைகளை துறைவாரியாக அனுப்பி வைப்பேன்.

எத்தனை நாட்கள் இந்த பிரசாரம்? 30 நாட்களுக்கு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. காலையும் மாலையும் தொடர்ந்து நடத்தப்படும். 30 நாட்களில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. நிச்சயமாக முடித்து விடுவோம். நமக்கு நாமே போல, இந்தப் பிரசாரம் பொதுக்கூட்டம் போன்றதா? இது, 100 நாட்களில் மக்களின் பிரச்னைகள் தீர்த்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் 2 நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் திட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் செல் உள்ளது. அதில் இல்லாமல் இந்த திட்டத்தில் என்ன புதுமை உள்ளது?

மக்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்று உறுதி கூறி மனு பெறப்பட்டு, ரசீது கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஆதாரத்தோடு வந்து என்னிடம் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. 100 நாட்களில் பட்டா பிரச்னை, குடிநீர் பிரச்னை, பள்ளிக்கூடப் பிரச்னை, ஆசிரியர் பிரச்னை, ஓய்வூதிய பிரச்னை, முதியோர் உதவித்தொகை பிரச்னை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை என்பது போன்ற சிறு சிறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

கூட்டணி பேச்சு வார்த்தைகள் எப்போது? கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் அறிவிக்கப்படும் என்றார்.  மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போது திமுக பொது செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கோபாலபுரத்திற்கு வந்த அவரை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிற்றரசு, பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர்ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். முதியோர் உதவித்தொகை பிரச்னை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை என்பது போன்ற சிறு சிறு பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும்.


Tags : DMK ,constituencies ,MK Stalin , 100 days solution to people's problems when DMK comes to power: immediate action on 1 crore petitions; MK Stalin's Promise of Action; Campaigning in 234 constituencies from the 29th
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...