×

அனாதையாகும் சொகுசு கார்கள்!

மத்தியக் கிழக்கு நாடுகள் சொகுசு கார்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. உலகின் மிக உயர்ந்த கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் அங்கு உலவுவது வழக்கம். சொகுசுக் கார்கள் தயாரிக்கும்  நிறுவனங்களேகூட மத்தியக் கிழக்கு சந்தையின் வாடிக்கையாளர் தேவையை மையமிட்டே கார்கள் தயாரிப்பது வழக்கம்.சாதாரண கார்களைவிட சொகுசுக் கார்களின் எண்ணிக்கைதான் இங்கு அதிகம். குறிப்பாக, துபாயில் திரும்பிய திசையில் எல்லாம் சொகுசுக் கார்கள்தான். கட்டற்றுப் பெருகும் சொகுசு கார்களால் சமீபமாய் துபாய் அரசுக்கு ஒரு புதிய தலைவலி உருவாகியிருக்கிறது. இந்தக் கார்கள் ஆங்காங்கே அப்படியே கைவிடப்பட்டு செல்லப்படுவதுதான் அது.

துபாயின் விமான நிலைய பார்க்கிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அப்படியே கைவிடப்படுகின்றன. பென்ஸ், பி.எம்.டபிள்யூ, போர்சே, பெராரி, ரோல்ஸ்ராய்ஸ்  போன்ற அதிசொகுகு கார்கள் கூட இவ்வாறு கைவிடப்படுகின்றனவாம்.ஆண்டுதோறும் சர்வ சாதாரணமாக மூன்றாயிரம் கார்கள் வரை இவ்வாறு கைவிடப்படுகின்றன என்கிறார்கள்.என்ன காரணம் என்று கேட்டால் துபாயின் கடுமையான ஷரியத் சட்டங்களே காரணம் என்கிறார்கள். துபாயில் சொகுசு கார்களை எளிதாகக் கடனுக்கு வாங்கலாம். ஆனால், இதற்கான கடனை கட்ட  இயலாவிடில் ஷரியத் சட்டப்படி கடுமையான சிறைதண்டனை கிடைக்கும். மற்ற நாடுகள் போல் கோர்ட், கேஸ் என்று இழுத்தடித்துக்கொண்டிருக்க இயலாது. இதனால், துபாயில் சுற்றித் திரியும்  வெளிநாட்டுகாரர்கள் ஒரு கட்டத்தில் விமான நிலையங்களிலோ பொது இடங்களிலோ கார்களை நிறுத்திவிட்டு ஓடிவிடுகிறார்களாம். இப்படி நிறுத்தப்படும் கார்களை போலீசார் கைப்பற்றி ஏலம்  விடுகிறார்கள். இதனால்தான் துபாயில் மிகமிக சொகுசான கார்கள்கூட மிகச் சிறிய விலையில் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால், இந்தக் கார்களை வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது.  ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி இரண்டுமே அதிகம் என்பதால் அங்கேயே இருப்பவர்களால் மட்டுமே வாங்க இயலும்.

Tags : சொகுசு கார்கள்
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...