சென்னை : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிவர் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதுவரை பயிர் காப்பீட்டு செய்யாத விவசாயிகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி இழப்பீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா பேரிடர் பாதிப்பினால்தான் விவசாயிகள் நெல், வாழை, தென்னை போன்றவற்றுக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை என்பதை கருத்தில் கொண்டு, தற்போது பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் பயன் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
மேலும், மழையால் மூழ்கியுள்ள நெற்பயிரை மீட்டெடுப்பதற்கான சிறப்பு உதவிகளையும் வேளாண்மைத்துறையின் வழியாக பழனிசாமி அரசு விவசாயிகளுக்கு உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.