திருமங்கலம்: திருமங்கலம் ராயபாளையம் முக்திநிலையில் அமைந்துள்ள 108 கோயிலில் 16 விநாயகர் மற்றும் அறுபடை முருகன் கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமங்கலத்தை அடுத்துள்ள ராயபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள முக்திநிலையத்தில் சத்ய யுகசிருஷ்டி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்திற்குள் 108 கோயில்களும் 300 தெய்வசன்னிதானங்களும் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அமைந்துள்ள 16 விநாயகருக்கும், திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை முருகனுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தன.
இதில் திருமங்கலம், ராயபாளையம், மேலக்கோட்டை ஆலம்பட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாடுகளை முக்திநிலைய ஆசிரமதலைவர் வசந்தசாய், தலைமை நிர்வாகி வெங்கட்ராமன் செய்திருந்தனர்.