×

பல்லடம் அருகே உல்லாசத்துக்கு அழைத்த மேலாளரை கட்டிப்போட்டு உதைத்த பெண்கள்

பொங்கலூர்: பல்லடம் அருகே உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை பெண்கள் கட்டிப்போட்டு உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக 2 பெண்களையும், மேலாளரையும் போலீசார் கைது செய்தனர். பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் அவிநாசி சூளை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (43) என்பவர் அங்கு பணியாற்றி வரும் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து அவரது வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும், அவரது தோழியும் பல்லடம் அடுத்த அருள்புரம் பகுதியில் உள்ள பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டைக்கு கடந்த 14ம் தேதி சிவக்குமாரை வரவழைத்தனர். பின்னர் மிளகாய் பொடியை தூவி இருவரும் சரமாரியாக தாக்கினர். கீழே விழுந்த சிவக்குமாரை கட்டிப்போட்டு உதைத்தனர். தொடர்ந்து அவர்கள் சிவக்குமார் மீது பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், சிவக்குமார் மதுரையை சேர்ந்த அந்த பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததும், அவர்கள் பணிபுரிந்த இடத்தில் இருந்து அவர்களை வேலையை விட்டு நீக்கி அனுப்பியதும், இதனால் ஆத்திரமடைந்து சிவக்குமாரை பல்லடம் அருகே வரவழைத்து அந்த பெண்கள் தாக்கியதும் தெரியவந்தது. அந்த பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். இதேபோல், சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இரு பெண்களும், தங்களை உல்லாசத்துக்கு அழைத்த மேலாளர் சிவக்குமாரை தாக்கியதால் தங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை மிளகாய் பொடியை தூவி கட்டிப்போட்டு பெண்கள் உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : women ,manager ,party ,Palladam , Company Manager, sexual harassment
× RELATED கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு...