×

குட்கா விவகாரத்தில் பேரவை உரிமை மீறல் குழு 2வதாக திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கில் ஐகோர்ட் இன்று இடைக்கால உத்தரவு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க., எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளது. தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலைபொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 2017ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவற்றை பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். இதையடுத்து, சபாநாயகர் உத்தரவுபடி எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் 2 எம்எல்ஏக்கள் இறந்தனர். ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் வாதிடும்போது, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் அனுமதி பெற்று குட்கா பொருட்களை காட்டி தடை செய்யப்பட்ட பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தினார். இதையடுத்து, ஆகஸ்ட் 28ம் தேதி ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தால் கூட அதை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமே தவிர உரிமை மீறல் பிரச்னை எழுப்பக் கூடாது எனக் கூறியுள்ளது. உரிமை மீறல் இல்லை எனக் கூறிய பின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, இதில் எந்த உள்நோக்கம் இல்லை என்றார். மூத்த வக்கீல் அமித் ஆனந்த் திவாரி வாதிடும்போது, உரிமைக் குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தற்போது பாரபட்சத்துடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 2017ல் அனுப்பிய நோட்டீஸ் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார். அப்போது, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி காலஅவகாசம் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முந்தைய நோட்டீசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்த உடனேயே இரண்டாவது முறையாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார். உரிமை மீறல் இல்லை எனக் கூறிய பின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : court ,DMK ,Assembly Rights Violation Committee ,Gudka , ICC issues interim order in Gutka case
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...