சென்னை: கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலை சார்ந்து சேமாத்தம்மன் கோயில், லவபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், கோயிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு பக்தர்களிடம் நன்கொடையாக பணம் பெறப்படுகிறது.
ஆனால்,இந்த கட்டணம் மற்றும் நன்கொடைகளை போலி ரசீது அச்சிட்டு லட்சக்கணக்கில் கையாடல் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவதிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, போலியாக பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.