புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் அதிகமாக பாதிக்கப்பட்டவை குறு, சிறு தொழில்கள்தான். சமீபத்தில் தொழில்துறைக்கான சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, குறு, சிறு நிறுவனங்களுக்கான வரையறைகளை மாற்றியது. உற்பத்தி துறையாக இருந்தால் ரூ.25 லட்சம் வரை முதலீடு, சேவை துறையாக இருந்தால் ரூ.10 லட்சம் வரை முதலீடு உள்ளவை குறு தொழில்கள் என முன்பு வகைப்படுத்தப்பட்டன. தற்போது, ரூ.1 கோடி வரை முதலீடு மற்றும் ஆண்டு வர்த்தகம் ரூ.5 கோடி வரை உள்ளவை குறு தொழில்களுக்குள் வந்து விடும். இருப்பினும், வங்கிகளில் கடன் வாங்க இந்த சலுகை அறிவிப்புகள் உதவவில்லை என பெரும்பாலான குறு, சிறு தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த தொழில்துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து தனியார் அமைப்பு ஒன்று நடத்தியது.
இதில் 57 சதவீதம் பேர், தொழில் நடத்துவதற்கே பணம் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். வங்கி, நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கியதாக 14 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். மற்றவர்கள் வேறு வழிகளில்தான் பணத்தை புரட்ட வேண்டி வந்தது. செலவுகளை தாக்குப்பிடிக்க கடன் வாங்கியதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இப்போதைக்கு மீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் இவர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், கொரோனா முடிந்த பிறகு தொழில் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக 81 சதவீதம் பேர் கூறியுள்ளனர் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது.