×

கண்கள் உறங்குவதும் இதயம் உறங்காமல் இருப்பதும் மருத்துவக் கடவுள்களின் மகத்துவப் பணியால் : அமைச்சர் விஜயபாஸ்கரின் நெகிழ்ச்சி கவிதை!

சென்னை : உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அறிக்கையின் வாயிலாக மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவர் தினத்தையொட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

கண்கள் உறங்குவதும்
இதயம் உறங்காமல் இருப்பதும்
மருத்துவக் கடவுள்களின்
மகத்துவப் பணியால்
நரம்புகளில் கருணையை நிரப்பி
நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி
தன்னுயிருக்கு அஞ்சாது
பெருந்தொற்று பரவிய பேரிடர் காலத்திலும் கனிவோடு கடமையாற்றும் உங்களுக்கு
#மருத்துவர்தினவாழ்த்துக்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சித்  தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல்
தாம் நம் நம்பிக்கையின் ஊற்று.
அந்த பட்டியலை நீள்விக்க,
என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும். எனத் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் உயிர் காக்க, தன்னலம் பாராமல் பணியாற்றும் கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்! என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று தேசிய மருத்துவர்கள் தினம்:  கொரோனா என்ற தீமையை ஒழிக்க உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும்  மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உயிர்காக்கும்  மருத்துவர்களை நேசிப்போம்; போற்றுவோம்!, என தெரிவித்துள்ளார்.


Tags : Vijayabaskar ,Minister Vijayabaskar , Eyes, Heart, Medical Gods, Great Work, Minister Vijayabaskar
× RELATED வழிப்பறியில் ஈடுபட முயன்ற 8 பேர் கும்பல் கைது