அண்ணாநகர், ஜூன் 18: நெற்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை, கோயம்பேடு பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நெற்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் பின்னால் வந்த ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தம்போடவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது என்.டி.பட்டேல் சாலை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சந்துரு(29) என தெரியவந்தது. மேலும், இவர் அப்பகுதியில் தொடர்ந்து பெண்களிடம் இதுபோன்று அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சந்துருவைக் கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்று பாலியல் சீண்டல் சம்பவங்கள் கோயம்பேடு பகுதிகளில் அதிகம் நடைபெறுவதாகவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லாதது தான் இதற்கு காரணம் எனவும், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
