புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புதையல் மற்றும் ஆண் வாரிசுக்காக 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பன்னீர் செல்வத்திற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தமக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த பன்னீர் செல்வம், நண்பர் ஒருவரின் உதவியுடன் மந்திரவாதியை நாடினார். மகளை நரபலி கொடுத்தால், ஆண் வாரிசு உருவாகும் என்றும் கூடவே புதையல் கிடைக்கும் என்றும் மந்திரவாதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 13 வயது தனது மகளான வித்யாவை, காட்டுக்கு அழைத்துச் சென்று பன்னீர் செல்வம் கொலை செய்துள்ளார். கடந்த 18ம் தேதியன்று நடந்த கொலை குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது மகளை நரபலி கொடுத்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உதவியாக இருந்த நண்பரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.ஆண் வாரிசு மற்றும் புதையலுக்காக 13 வயது மகளை நரபலி கொடுத்தது நொடியூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.