பெங்களூரு: பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டஅமுல்யா மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி கன்னட மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பெங்களூரு டவுன்ஹால் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது, திடீரென்று அந்த இடத்திற்கு வந்தபெண் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பதாகையை எடுத்து காட்டினார். அதில், ‘விடுதலை கொடு, விடுதலை கொடு காஷ்மீரி, இஸ்லாமியர், தலித், பகுஜன், திருநங்கைகளுக்கு விடுதலை கொடு’ என்று கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர். உடனே, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் மல்லேஸ்வரத்தை சேர்ந்த ஆராத்ரா என்று தெரிய வந்தது. தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கிராபிக் டிசைனிங் படித்து வருகிறார். அமுல்யாவை தொடர்ந்து, ஆராத்ரா அதே போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் இருவருக்கும் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..