சென்னை: இன்று திட்டமிட்டபடி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 14ம் தேதி இரவு சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் ஏராளான பெண்களும், ஆண்களும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள், சட்டமன்றத்தை முற்றுகையிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.
தடை உத்தரவையடுத்து, முற்றுகைபோராட்டம் நடத்துவது குறித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று சென்னையில் அவசர ஆலோசனை நடந்தது. ஆலோசனைக்கு பிறகு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில், அறவழியில், இது எந்த வகையிலும் வறம்பு மீறாத, வகையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும். அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர் . இவ்வாறு அவர்கள்கூறி னர். இந்நிலையில் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.