புழல்: செங்குன்றத்தில் ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 28 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.செங்குன்றம் அருகே அலமாதியில் இருந்து லாரியில் ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ வேலுமணி தலைமையில் போலீசார், செங்குன்றம் அடுத்த காந்திநகர் போலீஸ் பூத் அருகே, திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வேகமாக வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரிக்குள் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி செல்ல 28 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர், லாரியில் இருந்த 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் காசி ரெட்டி (62), கிளினர் ரத்தினம் (45), செங்குன்றம் அருகே காந்தி நகரை சேர்ந்த பரமகுரு (30) என தெரியவந்தது. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை ஆந்திராவுக்கு கடத்தி சென்று, அங்கு பாலீஷ் போட்டு எடுத்து வந்து, தமிழகத்தில் அந்த அரிசியை மீண்டும் அதிக விலைக்கு விற்று வருவதை தொழிலாக செய்து வருகின்றனர் எனத் தெரியவந்தது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரையும் கைது செய்தனர்.