×

ஸ்டான்லி மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாப பலி

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் தரணிஷ் (15) என்ற மகன் இருந்தான். இவன் வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 13ம் தேதி சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவனை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தான்.  இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுபற்றி சிறுவனின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்,  “எங்கள் மகனுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை. தவறான சிகிச்சையால் தான் இறந்துள்ளான். மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை  அறிக்கை வந்த பிறகு தான் விசாரணை நடத்துவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Tags : Stanley Hospital ,At Stanley Hospital , Stanley Hospital, fever, boy, kills
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...