பூந்தமல்லி : மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகம் முன், நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பீமாராவ் தலைமை வகித்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ‘‘5 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்று குடியிருப்பவர்களுக்கு கிரயப் பத்திரம் வழங்க வேண்டும், என கோஷம் எழுப்பினர். பின்னர், வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், கோரிக்கை மனுக்களை பெற்று, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.