சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 3 புயல்கள் உருவாகி தமிழகத்தை விட்டு விலகிச் சென்றன அதனால், கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை இல்லை. வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வங்கம் நோக்கி சென்றுள்ள புல்புல் புயல் செயலிழந்த பிறகே, தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் குறிப்பாக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையின் அளவு குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னயைில் அக்டோபர் 1ம் தேதி முதல் முதல் நவம்பர் 12ம் வரை 279 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இக்காலக்கட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 414 மி.மீ. ஆகும். எனவே, 33% குறைவாக மழை பதிவாகியுள்ளது. கோவையில், 335.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இக்காலக்கட்டத்தில் இயல்பாக 238.8 மி.மீ. மழை பதிவாகும். எனவே, 40% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.