×

கடலூர் அருகே விளம்பர பலகையில் இருந்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அருகே விளம்பர பலகையில் இருந்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே வங்கியின் விளம்பர பலகையில் உள்ள மின்சாரம் தாக்கி தினேஷ் குமார் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அப்பகுதியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை குள்ளஞ்சாவடியில் உள்ள மருத்துவமனைக்கு மாணவர் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் வேகமாக பேருந்து வருவதை கண்டு சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுள்ளார். தொடர்ந்து குள்ளஞ்சாவடியில் உள்ள சிண்டிகேட் வங்கினுடைய விளம்பர பலகையானது சாலையின் ஓரத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள பைப்பில் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில் தவறுதலாக மின்சாரம் பாய்ந்த நிலையில், அங்கு நின்றிருந்த மாணவர் பைப்பினை தொட்டுள்ளார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விளம்பர பலகையானது கடலூரிலிருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் சாலைக்கு மிக அருகில் வைக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கிய நிலையில் இவ்வகையான மின்சார விளம்பர பலகைகள் இருப்பதால் மேலும் பல உயிர்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Tags : billboard hit ,Cuddalore. Cuddalore , Cuddalore, billboard, electricity, school student, casualties
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...