×

வடபழனி பஸ் டெப்போவில் விபத்து இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், அரசு வேலை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: வடபழனி பஸ் டெப்போவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ₹2 லட்சம், அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் கடந்த மாதம் 28ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்தில் இருந்த மாநகர போக்குவரத்து பணியாளர்களான சென்னையை சேர்ந்த கே.சேகர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ப.பாரதி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும்,  பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 மற்றும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ₹25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Vadapalani,Bus ,Depot,Rs.2 lakh
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்