திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பருவமழை கடந்த ஜூனில் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. கேரளாவில் கடந்த 8ந்தேதியில் இருந்து கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு இதுவரை 121 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 58 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான கேரள மாநில பேரிடர் மேலாண் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடுவதாவது; கடந்த 8ந்தேதி முதல் இன்று வரை கேரள வெள்ள பாதிப்பு சம்பவத்திற்கு 40 பேர் காயமடைந்து உள்ளனர். 21 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கேரளாவில் 185 முகாம்கள் அமைக்கப்பட்டு 8 ஆயிரத்து 247 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளன. 1,789 வீடுகள் முழுவதும் மற்றும் 14 ஆயிரத்து 542 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது.